Saturday, October 20, 2012

உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ரயில்வே தான்

உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பறையாக இந்திய ரயில்வே விளங்குவதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மேலும் உலகிலேயே குப்பைகளின் தலைநகராக இந்தியா விளங்குவதாகவும், இதற்காக நாம் வருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் நிலவும் சுகாதாரமின்மை குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு 1.1 கோடி பேர் பயணிக்கும் ரயில்வே தான் உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறையாக திகழ்கிறது.

50,000 ரயில் பெட்டிகளில் வெறும் 436 பெட்டிகளில் தான் இப்போது பயோ-டாய்லட் எனப்படும் சுத்தமான கழிப்பறைகள் உள்ளன. மற்றவற்றின் கழிவு எல்லாமே வெளியே அப்படியே தான் வந்து விழுகிறது. இதில் ஆண்டுதோறும் புதிதாக 4,000 ரயில் பெட்டிகள் புதிதாக வேறு தயாரிக்கப்படுகின்றன.

விரைவில் பிரான்சிடமிருந்து 20 பில்லியன் டாலர் செலவில் 126 போர் விமானங்களை வாங்கவுள்ளோம். இதில் ஒரு விமானத்தின் பணத்தை செலவிட்டாலே 1,000 கிராமங்களை கழிப்பறை பிரச்சனையைத் தீர்த்துவிடலாம்.

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்துள்ள பயோ-டாய்லட் வசதியை இந்த கிராமங்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரக வளர்ச்சி, குடிநீர், சுகாதாரத்துக்கு வெறும் ரூ. 90,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ-டாய்லெட்களை பொறுத்துவதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை ஏற்க ஊரக வளர்ச்சித்துறை தயாராக உள்ளது. இதை ரயில்வே போர்ட் தலைவரிடம் தெரிவித்துள்ளேன் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

இதையடுத்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, பயோ-டாய்லெட் தொழில்நுட்பத்தைத் தர பாதுகாப்புத்துறையும் டிஆர்டிஓவும் தயார். ஆனால், ரூ. 1.93 லட்சம் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டது சரியே. அது நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடையது என்றார்.

இதைத் தொடர்ந்து விளக்கம் தந்த ஜெய்ராம் ரமேஷ், நான் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியதை தவறாகக் கூறவில்லை. ஆனால், டிஆர்டிஓ போன்ற ராணுவ ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கும் பயோ-டாய்லெட் போன்ற தொழில்நுட்பங்கள் சமூகத்துக்கும் பெரிய அளவில் பயன்பட வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment