Sunday, August 26, 2012

மூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா

எல்லோர் கிட்டேயும் இருக்கற கேமராதான் நம்ம கிட்டையும் இருக்கு,எல்லோரையும் போல தான் நாமளும் க்ளிக்கிட்டு இருக்கோம்,ஆனா சில பேரு மட்டும் எப்படிய்யா பாத்தா பாத்துக்கிட்டே இருக்கறா மாதிரி படம் எடுக்குறாய்ங்க அப்படின்னு நான் பல சமயம் யோசிச்சிருக்கேன். அட!! அவனுங்க எல்லாம் லட்ச கணக்குல பணத்தை கொட்டி கேமரா வாங்கி இருக்காங்கையா!! நாம எல்லாம் அது மாதிரியா அப்படின்னு சொல்றீங்களா???அதென்னமோ நானும் அது மாதிரி தாங்க நெனைச்சிட்டு இருந்தேன்,ஆனா கொஞ்சம் கொஞ்சமா எடுக்க எடுக்க இதுல நாம எல்லாம் கூட சுலபமா தெரிஞ்சுக்கறா மாதிரி சில நுணுக்கங்கள் இருக்குன்னு தெரிஞ்சுது!!! அதான் உங்க கிட்ட அப்பப்போ இதை பத்தி கொஞ்சம் கதை அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதெல்லாம் நாம தெரிஞ்சுக்கிட்டு உபயோகப்படுத்தியே ஆகனும்னு அர்த்தம் இல்லீங்கன்னா. ஒரு காட்சி நல்லா இருக்கும்னு உங்க மனக்கண்ணுல தோனிச்சுன்னா டப்புனு அதை ஒரு படம் புடிச்சுறனும்!! அங்க போய்ட்டு நம்ம நுணுக்கம் எல்லாம் யோசிச்சிட்டு இருக்க முடியாது தான்.ஆனா இந்த மேட்டரு எல்லாம் காதுல போட்டு வெச்சா நம்மல அறியாமையே அதெல்லாம் நம்ம யோசனையில ஊறி படம் எடுக்கும்போது தானா தோனாதா??சும்மா கேட்டு தான் வெச்சுக்கலாமே்!! என்ன நான் சொல்லுறது???

மூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா

நம்ம தலைவரு என்னடான்னா எட்டுக்குள்ளே வாழ்க்கையே இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்காரு. ஆனா இந்த புகைப்படக்கலையில் இருக்கற தலைங்க எல்லாம் என்ன சொல்றாங்கன்னா ,ஒரு காட்சியை மூனா பிரிச்சு குறுக்கையும் நெடுக்கையும் கோடு போட்டோம்னு வெச்சுக்கோங்க ,அந்த கோடுகள் ஒடுற பகுதிகளும் ,அவை ஒன்றுக்கொன்ரு குறுக்கிட்டுக்கொள்ளும் பகுதிகளும் தான் மனிதனின் பார்வை இயற்கையாக விழும் பகுதிகள் அப்படின்னு சொல்றாய்ங்க. அதாவது எந்த படத்தை நீங்க எடுத்துக்கிட்டாலும் உங்க பார்வை இயற்கையாக நாம கோடு போட்ட பகுதிகளை தான் முக்கியமா கவனிக்குமாம். எந்த ஒரு படம் பாத்தாலும் அதுல ஏதாவது ஃபிகரு தேறுமா அப்படின்னுதான் என் கண்ணு போகுதுன்னு என்று எல்லாம் யோசித்துக்கொண்டு இங்க போட்டு குழப்பிக்காதீங்க!!
அது உங்கள சொல்லி குத்தம் இல்லை!!! உங்க வயசு அப்படி!!! அதுக்கும் புகைப்பட கலைக்கும் ஒன்னும் சம்பந்தம் கிடையாது.
அதாவது நீங்க எந்த ஒரு படம் எடுத்தாலும் படத்தோட முக்கியமான பொருள் இந்த கோடுகளிலோ அல்லது கோடுகள் தொட்டுக்கொள்ளும் புள்ளிகளிலோ இருக்கிறார்போல் பார்த்துக்கொண்டால் பார்வையாளர்களுக்கு படம் அழகாக தெரியும் என்று சொல்கிறார்கள்.இதற்கு ஆங்கிலத்தில் "Rule of the thirds" என்று பெயர். தமிழிலே இதற்கு உங்களுக்கு சௌகரியமான பெயரை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்!!முப்பகுதி கோட்பாடு என்று வேணும்னா கூப்டுக்கலாமா??

சரி சரி!!! சாதாரணமாவே நான் எழுதினா ஒன்னும் புரியாது அதுலையும் பெரிய கோட்பாடு எல்லாம் சொன்னால் புரியுமா?? இருங்க ஒரு உதாரணத்தோடு இந்த நுணுக்கத்தை தெளிவா பாக்கலாம்.
இப்போ நீங்க வலது பக்கத்துல இருக்கற படத்தையே எடுத்துக்கோங்களேன்,எவ்ளோ சீரா அழகா இருக்கு. படத்தோட முக்கியமான பகுதின்னு பாத்தீங்கன்னா அது வானமும் தண்ணீரும் சேருகிற தொடுவானப்பகுதி. அது எப்படி சரியா மேலிருந்து போடப்பட்ட இரண்டாவது கோடுடன் இணைந்து இருக்கு பாருங்க. அதுவும் இல்லாம படத்தின் ஒரு முக்கிய பொருளான மரமும் கூட இரண்டாவது கோடுகள் சேரும் புள்ளியில் இருப்பதால் படத்துக்கு அது பாந்தமாக இருக்கு. படத்தின் இன்னொரு முக்கியமான விஷயமாக இருக்கும் வானில் தோன்றும் ஒளித்திட்டு பகுதி சரியா புள்ளிக்கு மேல இல்லாட்டாலும் கொஞ்சம் பக்கத்துல இருக்கறதுனால பரவாயில்லை.

அப்போ இனிமே படம் எடுக்க போனா ஸ்கேல்,டேப்பு எல்லாம் எடுத்துட்டு போய் புள்ளி வெச்சு கோடு போட்டு தான் படம் எடுக்கனுமா??? அப்படின்னு கேக்கறிங்களா???
நான் முன்னமே சொன்னா மாதிரி இதுப்படி எடுக்கும் படங்கள் தான் அழகாக இருக்கும் என்று ஒன்னும் சட்டம் அல்ல. எடுத்த படங்கள் எதனால் நன்றாக வரவில்லை என்று குழப்பம் இருந்தாலோ மற்றும் நம் படம் எடுக்கும் திறனை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்றாலோ இந்த நுணுக்கங்களை எல்லாம் கருத்தில் கொள்ளலாம். ஏதாவது ஒரு காட்சி அழகாக உங்களுக்கு தோன்றினால் உடனே எதை பற்றியும் யோசிக்காமல் படம் எடுத்து விடுங்கள்!! இந்த நுணுக்கங்கள் எல்லாம் வெறும் வாழிகாட்டுதலுக்காக மட்டும்தானே தவிர செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

அதுவுமில்லாமால் நீங்கள் இந்த கோட்பாட்டை போட்டோ எடுக்கும்போது தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று இல்லை. ஏற்கெனெவே எடுத்த படத்தில் கூட இந்த கோட்பாட்டிற்கு ஏற்றார்போல் கொஞ்சம் வெட்டி (crop) செய்து கூட போட்டோக்களை மெருகேற்றலாம். அதற்கான உதாரணத்தை கீழே பார்க்கலாம்!! :-)
வேறு ஒரு புகைப்படக்கலை சார்ந்த தலைப்போடு அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன். அது வரை இந்த முப்பகுதி மகத்துவத்தை புரிஞ்சிக்கறா மாதிரி சில படங்களை விட்டு செல்கிறேன்.
பார்த்து விட்டு போங்க!! இதை பயன்படுத்தி பாத்துட்டு பின்னூட்டத்துல உங்க அனுபவங்கள சொல்லிட்டு போங்க!!

வரட்டா??? :-)








0 comments:

Post a Comment