Thursday, December 20, 2012

'செவன் டிகிரி செல்சியஸ்': 7 ரூபாயில் அரசு பேருந்து கூரியர் சேவை!

சென்னை:'  செவன் டிகிரி செல்சியஸ்'என்ற பெயரில் வெறும் 7 ரூபாய் கட்டணத்தில் தபால்களை அரசு பேருந்துகள் மூலம் அனுப்பும் கூரியர் சேவையை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அரசு போக்குவரத்து கழக பஸ்களில், கூரியர் மற்றும் பார்சல் சேவை அறிமுகம்  செய்யப்படும் என  தமிழக அரசு அறிவித்திருந்தது.இத்திட்டம் கோவை போக்குவரத்து  கழகத்தில் முன்னோட்டமாக கொண்டு வரப்பட்டது.


'செவன் டிகிரி செல்சியஸ்'


இதன் மூலம் கோவை போக்குவரத்துக் கழகம், 24 லட்சம் ரூபாய் வருவாயை,   ஈட்டியது. போக்குவரத்துக் கழகங்களுக்கு, இதன் மூலம், கூடுதல் வருவாய்  கிடைப்பதால், மாநிலம் முழுவதும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுஉள்ளது.


இதனைத் தொடர்ந்து இந்த கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் குறித்து,பொதுமக்களிடம்  பிரபலபடுத்தும் நோக்கில்,'செவன் டிகிரி செல்சியஸ்' என்ற சிவப்பு வண்ண ஸ்டிக்கர்கள்  அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இச்சேவை  மூலம் தபால்களை, ஏழு ரூபாயில் அனுப்பலாம். இதை குறிக்கும் வகையில், '7  டிகிரி செல்சியஸ்' என்று பெயரிட்டுள்ளோம்.


அரசு பஸ்களில் அனுப்பும் தபால் மற்றும் பொருட்களை, பஸ் சேமிருடத்தில் உள்ள பஸ்  நிலையங்களில் பெற்று கொள்ளலாம்.தபால் மற்றும் பொருட்கள், வீடுகளுக்கு நேரடியாக  சென்றடையாது.பொதுமக்களே, பஸ் நிலையத்தில் நேரடியாக பெற்று கொள்ள  வேண்டும்.கட்டண விபரம், கி.மீட்டருக்கு ஏற்றாற்போல் வெளியிடப்படும்"என்றார்.


மிகக்குறைந்த கட்டணத்தில் அரசு அறிமுகப்படுத்தி உள்ள இந்த சேவை பொதுமக்களுக்கு  லாபகரமானதுதான் என்றாலும்,சில தனியார் கூரியர்களைப்போன்றல்லாமல், மக்கள்  அனுப்பும் தபால்கள் மற்றும் பார்சல்கள் பாதுகாப்பாக சென்றடைவதையும் அரசு  போக்குவரத்துக்கழகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment