Tuesday, November 20, 2012

அம்மாவின் கைப்பேசி – திரை விமர்சனம்

ஒன்பது குழந்தைகளுக்கு தாயான ரங்கநாயகியின் கடைசி மகனாக சாந்தனு. ஊரில் வேலை வெட்டி இல்லாமல், வீட்டில் அவ்வப்போது சிறுசிறு திருட்டுக்களை செய்து, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டு ஊதாரியாக திரிகிறான். தனது முறைப்பெண்ணான இனியாவை காதலிக்கிறான். தன் காதலுக்காக திருந்தி, இனியாவின் அப்பாவிடம் வேலைக்கு சேர்கிறான். இந்நிலையில், தனது அண்ணன் குழந்தைக்கு நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சி ஒன்றில் நகை காணாமல் போகிறது. அந்த நகையை சாந்தனுதான் திருடிவிட்டான் என்று அவனது சகோதரர்கள் அவன்மீது திருட்டு பட்டம் கட்டுகின்றனர்.
இதனால், கோபமடைந்த ரங்கநாயகி அவனை திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறாள். மனமுடைந்த சாந்தனு அந்த ஊரை விட்டு செல்கிறான்.
ஏழு வருடங்களாக சாந்தனு எங்கிருக்கிறான்? என்பது அறியாத அவனது அம்மாவுக்கு திடீரென பார்சலில் ஒரு செல்போன் வருகிறது. அந்த போனில் பேசும் சாந்தனு, நான் இன்னும் சில தினங்களில் ஊருக்கு வருகிறேன் என்று கூறுகிறான்.
வீட்டை விட்டு வெளியேறிய சாந்தனு ஒரு கல்குவாரியில் வேலைக்கு சேர்கிறான். அக்குவாரியில் பெரிய பொறுப்பில் அமர்கிறான். அங்கு சூப்பர்வைசராக பணிபுரியும் நாகிநீடு கல்குவாரியில் செய்யும் முறைகேடுகளை அக்குவாரி முதலாளியான அழகம்பெருமாளிடம் சொல்லிவிடுகிறான் சாந்தனு.
இதனால், நாகிநீடுவை போலீஸ் கைது செய்து, அவனிடமிருந்து முறைகேடு செய்த பணம் மற்றும் பொருள்களையும் கைப்பற்றி விடுகிறது. இதனால், ஆத்திரம் கொண்ட நாகிநீடு, தன்னுடைய உதவியாளரான தங்கர்பச்சானின் உதவியோடு சாந்தனுவை தீர்த்துக்கட்ட எண்ணுகிறார்.
ஒருகட்டத்தில் சாந்தனு தனது சொந்த ஊருக்கு கிளம்பும் நேரத்தில் இருவரும் சேர்ந்து அவனை தீர்த்துக் கட்டுகிறார்கள். அப்போது சாந்தனுவிடம் இருக்கும் பணத்தை இருவரும் பிரித்துக் கொள்கிறார்கள்.
பணத்தோடு வீடு திரும்பும் தங்கர்பச்சான் அதனை தன் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறார். அதை பார்த்துவிடும் அவரது மனைவி தங்கர்பச்சானை திட்டுகிறார். இந்த திருட்டு பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்துவிட்டு வருமாறு அவரை வற்புறுத்துகிறார். இதனால் தங்கர்பச்சான் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நாகிநீடுவை பார்க்கச் செல்கிறார். அதனை வாங்க மறுக்கிறார் நாகிநீடு.
பணத்தை என்னசெய்வதென்று தெரியாமல் தவிக்கும் தங்கர்பச்சான் சாந்தனு குடும்பத்திடமே அதை ஒப்படைக்க முடிவெடுக்கிறார். அதன்படி சாந்தனுவின் சொந்த ஊருக்கு செல்கிறார் தங்கர்பச்சான். அங்கு என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.
கிராமத்து சாயலில் முழுக்க முழுக்க கண்களில் ஈரம் கசிந்த தாயின் வலியை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் தன் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். கிராமத்தின் அடையாளங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அண்ணாமலையாக வரும் சாந்தனு கிராமத்து பையனாக வாழ்ந்திருக்கிறார். தனது சகோதரர்கள் திருட்டு பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியேற்றும் போதும், தன் காதலி காதலை மறுக்கும்போதும் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.
சாந்தனுவின் முறைப்பெண்ணாக வரும் இனியா, தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஏழு வருடம் தன் மாமன் வராத காரணத்தினால், இறந்துவிட்டதாக எண்ணி வேறொருவரை திருமணம் செய்துகொள்ளும் இவர், மாமன் உயிரோடு இருக்கிறான் என்று அறிந்ததும் இவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
சாந்தனுவின் அம்மாவாக வரும் ரேவதி, கிராமத்து தாயின் பாசத்தையும், பரிதவிப்பையும் மிகவும் உருக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவர் இறக்கும் காட்சியில் ரசிகர்களின் கண்களும் கலங்கத்தான் செய்கிறது.
படத்தில் பெரும்பாலும் சோகமும், அழுகையுமாகவே உள்ளதால், இன்றைய காலக்கட்ட ரசிகர்களை கவருமா என்று சந்தேகத்தை எழுப்புகிறது. ரோஹித் குல்கர்னியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். ‘அம்மா தானே’ என்ற பாடல் நம்மைத் தாலாட்ட வைக்கிறது.
மொத்தத்தில் ‘அம்மாவின் கைப்பேசி’ அழகான எதார்த்தம்.
மதிப்பீடு செய்க

0 comments:

Post a Comment