Sunday, January 27, 2013

சேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்

சேராப்பட்டு, விழுப்புரம்
கள்ளக்குறிச்சி சென்ற போது அருகில் ஒரு மலையில் சிறு அருவி இருக்கிறது என்ற விவரம் தெரியவரவே அந்த இடத்தைக் காண சென்றோம்.
கள்ளக்குறிச்சி டு திருவண்ணாமலை ரோட்டில் புதூர்பிரிவு என்கிற இடத்தில் சேராபட்டு என்கிற மலை கிராமத்திற்கு செல்ல வழி பிரிகிறது..
இருமருங்கிலும் பசுமை....கல்வராயன் மலைத் தொடர் முழுவதும் இயற்கை அன்னை பரந்து விரிந்து கிடக்கிறாள்.மலை அடிவாரம் செல்லும் வரை கிராமங்கள் நிறைய இருக்கின்றன.விவசாயம் செழிப்புடன் இருக்கிறது.மலைப்பாதை ஆரம்பித்தவுடன் பசுமை சாலைக்குள் செல்வது போன்ற உணர்வு.இன்னும் செப்பனிடப்படாத பாதைகள் இருக்கின்றன.

 ஒரு சிலஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன.கிட்டதட்ட 39 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சேராபட்டு என்கிற ஊர்.குளிர் இல்லாமல் சமதளத்தில் இருக்கிற உணர்வே இருக்கிறது.சேராபட்டு ஊருக்கு முன்பே மான்கொம்பு என்கிற ஊரில் தான் அந்த அருவிக்கு செல்லும் வழி இருக்கிறது என்று ஒரு வழிப்போக்கன் தகவல் தரவே மான்கொம்பு அடைந்தோம்...
அந்த ஊரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் பள்ளத்தாக்கு போன்ற இடம் வருகிறது.அங்கிருந்து அருவியை காண கீழிறங்கினோம்..இன்னும் பாதைகள் அமைக்கப்படவில்லை...சறுக்கிக்கொண்டே இறங்கினோம்200அடி ஆழத்தில் பசுமை நிறைந்த மரங்கள் ..சலசலக்கும் அருவியின் சத்தம் கேட்டு சிலிர்த்துப்போனோம்..தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது.ஆனால் பயங்கர ஜில்லென்று இருக்கிறது.பாறைகள் இடையே நீர் கொஞ்சமாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது.ஆள் அரவமற்ற இடம் என்பது பார்த்தாலே தெரிகிறது.அங்கிருந்து பார்த்தால் கல்வராயன் மலை மிக பசுமையாக இருக்கிறது.அருவியின் மேற்பரப்பில் இருந்து 100 அடி பள்ளத்தில் நீர் விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.தண்ணீர் வரத்து அதிகம் இருக்கிற நாட்களில் சென்றால் மிக அருமையாக இருக்கும்...ஆனால் அருவி கொட்டுகின்ற இடத்தினை பார்க்க முடியாது.
அங்கு உலாவிக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் கேட்டு பொங்கலம்மன் அருவி என்று தெரிந்துகொண்டோம்..அருவியை ஆசை தீர பார்த்துவிட்டு வெள்ளிமலை வழியாக அயோத்தியாபட்டணம் வந்து சேலம் அடைந்தோம்..
கல்வராயன் மலையானது 3 மாவட்டங்களான சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை சேர்ந்து அமைந்துள்ளது.கள்ளக்குறிச்சி சங்கராபுரம் வழியாக மலைப்பாதை மூலம் சேராபட்டு அடையலாம்.சேலம் அயோத்தியாபட்டினம் வழியாகவும் இந்த சேராபட்டு அடையலாம்.மலைப்பாதை வழியாக செல்லும் போது ஏற்படுகிற அனுபவம் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
சேராபட்டு இடத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் வெள்ளிமலை என்கிற ஊர் இருக்கிறது.அங்கும் ஒரு அருவி இருக்கிறது.கரியாலூர், கோமுகி அணை போன்ற இடங்கள் காணக்கூடியவையாக இருக்கின்றன.
நாங்கள் மான்கொம்பு அருகில் உள்ள அருவிக்கு மட்டும் சென்று வந்தோம்.இன்னொரு முறை இந்த ஏழைகளின் மலைவாசஸ்தலம் செல்ல வேண்டும் என்கிற ஆவலை தூண்டி இருக்கிறது.
இயற்கையை ரசிப்பவர்கள், தனிமையை விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம்...ஒவ்வொரு வருடமும் ஜூன் ஜூலை மாதங்களில் கோடைவிழா நடைபெறுகிறது கல்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள கரியாலூரில்.
Chrysanth WebStory Published by WebStory

1 comment:

  1. very useful information and photos i have visited this kalrayan hills by bus from kaLLakurichi. private vihicle is must to see all places.

    ReplyDelete