Thursday, June 7, 2012

ஜெயிக்கவைத்து ஜெயிக்க ஆசைப் படும் பயிற்சி மையம்!


உங்கள் பார்வையில் ஓர் தெளிவு இருந்தால், சமுதாயத்தின் நெளிவு சுளிவுகளை களைந்து, சமுதாயத்தை அழகாக்க முடியும். அந்த சமுதாயத்துக்கு உங்கள் பங்குக்கு, நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் புரிந்து கொள்ள முடியும். அதன்படி நீங்கள் செயற்படுவீர்கள்.
      மேற்கண்ட வரிகள் ஏதோ கவிதை போல் தோன்றினாலும், அந்த வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காண்பித்துக் கொண்டிருக்கிறார் குமரேஸ்வரி. சமுதாயத்திற்கு நேர்மையான அதிகாரிகளை உண்மையான சேவை மனப்பான்மையோடு உருவாக்கி தர பாடுபட வேண்டும். அப்போது இந்த சமுதாயத்தில் தவறுகள் களையப்பட்டுவிடும். குற்றமற்ற சமுதாயம் உருவாகும் என்பது தான் ஐஏஎஸ்* பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் குமரேஸ்வரியின்  ஒரே ஆசை.

       இதற்காகவே முழு மூச்சுடன் அவர் களம் இறங்கியிருக்கிறார். P.L. RAJ MEMORIAL STUDY CIRCLE என்கிற பெயரில், சென்னை அண்ணாநகரில் பயிற்சி வழிகாட்டி மையம் (Coaching Center) நடத்தி வருகிறார். 2006 இல் தொடங்கிய இந்த பயிற்சி நிலையத்திலிருந்து வருடாவருடம் தேர்ச்சிப் பெற்று போனவர்கள் அதிகம். அத்தனை பேர்களும் நேர்மையானவர்கள் என்று இன்றுவரை நிரூபித்துக் கொண்டிருப்பதுதான் குமரேஸ்வரிக்கு அவர்கள் செய்யும் கைமாறு.

(சுடரொளி)
  குமரேஸ்வரிக்கு இப்போது குரூப் 1 இல் பதவி கிடைத்திருப்பதால், அவரால் நேரடியாக இந்த பயிற்சி வகுப்பைக் கவனிக்க முடியவில்லை. அவருடன் 15 வருடங்களாக கூடவே இருந்து வளர்ச்சிக்குப் பாடுபட்ட சுடரொளி (புகைப்படத்தில் இருப்பவர்) இப்போது இந்த நிலையத்தைக் கவனித்துக் கொள்கிறார். இவ்விழிப்புணர்வு சேவை பலர் அறிந்திருப்பார்களாயின் இதனை முன்மாதிரியாக பின்பற்றலாம் என்ற நோக்கில் குமரேஸ்வரியிடம் தொடர்ந்து பேச்சை தொடர்ந்தோம்.
சொல்லுங்கள், இம்மையத்தின் நோக்கமென்ன?
இங்கு ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்கிற கனவுகளுடன் வருகிறவர்கள் பலர். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் திறமைகள் அவர்களுக்கேத் தெரியாது. அதைப் புரிய வைத்து, தெரிய வைத்து அவர்களை தயார் படுத்துவது என்பதே பெரிய கலை. நான் அதைத்தான் செய்கிறேன். குழந்தைக்குத் தாய்ப் பாலோடு கொஞ்சம் வீரத்தையும், நாட்டு பற்றையும் அந்த காலத்துத் தாய்மார்கள் ஊட்டினார்கள். ஆனால் இந்த காலத்துத் தாய்மார்கள் வீரத்தை சிறுவயதிலேயெ விதைத்துவிட  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறுகிறார்கள். அதை நாம் இப்போது கல்வியுடன் சேர்த்து தருகிறேன்.
     
தினம் தினம் பாடம் எடுக்கும் போது, வீரம், நாட்டுப் பற்று இரண்டையும் விதைக்காமல் விடுவதில்லை. இப்படித் தருவதனால் மட்டுமே ஒரு நேர்மையான அதிகாரியை உருவாக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. என்னிடம் படித்தவர்களில், பாதிபேர்கள் பணம் கட்டிப் படித்தவர்கள் என்றால் மீதி பாதிபேர் நான் பணம் கட்டிப் படிக்க வைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வெளியில் சென்று இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். நான் செய்ததை அவர்கள் பிறருக்கு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
நம்பிக்கைதான் வாழ்க்கை, தவிர நான் அவர்கள் மனதில் விதைத்த விதையின் வீரியம் எனக்குத் தெரியும். எனவேதான் பிறரை ஜெயிக்க வைப்பதன் மூலம், நல்ல சமுதாயத்தைத் தரவேண்டும் என்கிற என் எண்ணமும் ஜெயிக்கிறது. இது எனக்கு போதும், நான் படிக்க வைத்தவர்கள் பின்னால் என்னைக் கவனிக்க வேண்டும் என்கிற சுய நலண்ணம் எனக்கு இல்லை. இன்னும் நாலுபேரை ஜெயிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான்.
எப்படி இந்த சிறிய வயதில் இவ்வளவு தேடல் வந்தது?

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகில் சிவலூர்தான் நான் பிறந்த ஊர்.அப்பா பெரியசாமி  பெரிய பண்ணையார். இல்லை என்று வருபவர்களுக்கு கணக்கு பார்க்காமல் தந்தவர். அது என் மனதில்  பதிந்து போனது. அண்ணா லிங்கராஜ் ஊருக்கு நல்லது செய்தே இறந்து போனார். அவருக்கு நான்  ஐஏஎஸ் ஆகி  சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசை. அவர் நினைவாகத்தான் இந்த பயிற்சி நிலையத்தை ஆரம்பித்தேன். அவர் என் மனதில் விதைத்த விதையின்  வீரியம்தான் இன்று இப்படி வளர்ந்து நிற்கிறது.

   அத்துடன், அந்த ஊரில் பிள்ளைகளை கோடை விடுமுறையில் ஊருக்கெல்லாம் அனுப்ப மாட்டார்கள். அங்கு 'விவேகானந்தா கேந்திராலயா' என்று ஒரு பயிற்சிப்  பள்ளி உண்டு. விவேகானந்தரின் கொள்கைகள் பாட்டாகப் பயிற்சி தருவார்கள். அது எனக்குள் ஏற்படுத்திய வீரியமிக்க மாற்றங்கள் ஏராளம். அந்த வீரியம்தான் எனது இந்த சிறிய அளவிலான தொடக்கம். இன்னும் நான் இந்த சமுதாயத்துக்கு செய்யவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது.
 
விவேகானந்தா கேந்திராலயா பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

விவேகானந்தரின் கொள்கை என்பது தேசப் பற்றுதான். அவர் சாதிமதங்களை மதித்ததில்லை, இளைஞர்கள், குழந்தைகள் மனதில் பெரிய மாற்றம் கொண்டு வர முடியும் என்று நம்பினார். இமயம்  முதல் குமரிவரை மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றுதான் விரும்பினார். எனவே அந்த கொள்கைதான் எங்களுக்கு பாடலாக கற்றுக் கொடுக்கப் பட்டது. இன்றுகூட நான் கவலையாக இருந்தால் உடனே நான் விவேகானந்தா கேந்திராலயா பாடல்களைப் பாட ஆரம்பித்து விடுவேன்.

(கூறிக்கெண்டே  சட்டென  மிக இனிமையாக மனதைத் தொடுவதுபோல சில வரிகளைப் பாடினார்)
புதிய பாரதம் படிக்க பூபாளம் படுவோம்
இளைய கரங்கள் ஆயிரம் உறுதியோடு கூடுவோம்
எட்டு திக்கும் நாமினி சுட்டுவிரல் நீட்டுவோம்
பட்டறுந்து தீமைகள் தட்டு கெட்டு ஓடிடும்.

நிலவு கூட இன்று நம் கைகளுக்குள் ஆடுது
கனவு மெல்ல நடைபயின்று உண்மையினைத் தேடுது
பழையகால குமிழ் உடைந்து பாதைகளும் மாறுது
புதிய கீதம் விண்ணிலே புயலைப்போல சீறுது.

சாதி மத வெறியுடைத்து சமத்துவம் பேணுவோம்
நீதியிங்கு எல்லோருக்கும் பொதுவென ஓதுவோம்
நாளை வரும் வரலாறு நம் முகத்தைக் காட்டிடும்
நட்பு அமைதி முன்னேற்றம் நல்ல உலகை ஆக்கிடும்.

பனி படர்ந்த மலை முகட்டில் பாரத தாய் சிரிக்கிறாள்
அலையடிக்கும் குமரியில் பாதங்களை நனைக்கிறாள்
பாலையுடன் சோலைகளை தன்னிடத்தேக் கொண்டவள்
பல மொழி பல இனம் அரவணைத்து  நின்றவள்.
இப்படி விவேகானதா கலாகேந்திராலயாவில் பாடல்கள் மூலமே குழந்தைகளுக்கு நாட்டுப் பற்று மற்றும்  நாம் அனைவரும் ஒன்று என்கிற ஒற்றுமை உணர்வையும் ஊட்டி விட்டார்கள். இதில் பயின்றவர்கள்தானே என் அண்ணாவும், அக்காவும் எனவே எனக்குள் புதைந்த விதை அவர்களுக்குள்ளும் இருந்தது. அவர்கள் என்னை உருவாக்கினார்கள். 

உங்களுக்கு உதபுவர்கள் பற்றி?


(குமரேஸ்வரியின் அக்கா & மாமா)
         அக்கா தென்னரசியும், மாமா செல்வராஜும் கூட எனக்கு பண நெருக்கடிக் காலங்களில் உதவி செய்வாகள். எனக்கு இப்போது குரூப் 1 இல் பதவி கிடைத்திருப்பதால், என்னால் நேரடியாக இந்த பயிற்சி வகுப்பைக் கவனிக்க முடியவில்லை. என்னுடன் 15 வருடங்களாக கூடவே இருந்து வளர்ச்சிக்குப் பாடுபட்ட சுடரொளி இப்போது இந்த நிலையத்தைக் கவனித்துக் கொள்கிறார். இங்கு பணிபுரியும்,பார்கவி, லாவண்யா, சபரீஷ், ஜெயலக்ஷ்மி, கருப்பையா, சுபாஷ் அனைவருமே என் சிந்தனை உள்ளவர்கள். பணம் ஒரு பொருட்டாக நினைப்பவர்கள் இல்லை.

        சேவை மனப்பான்மையோடு ஒன்றுபட்ட சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து நடத்திவரும் பயிற்சி நிலையம் இது. இங்கு பணம் இருப்பவர்களுக்கும், கற்றுத் தரப்படும். பணம் இல்லாதவர்களுக்கும் அரவணைப்புடன் பயிற்சி தரப்படும்.

உங்களிடம் கற்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நாங்கள் உங்கள் மனதில் விதைத்த நேர்மை, உண்மையை நீங்களும் அதிகாரப் பூர்வமான அதிகாரிகளாகி நான்கு பேர் மனதில் விதையுங்கள். எங்களின் ஒரே எதிர்பார்ப்பு இதுதான்.
(ஐ.ஏ.எஸ்* எனப்படுவது இந்திய அரசில் ஆட்சிப்பணியினை மேற்கொள்ள சிறப்பு அமைப்பாக இந்திய அரசால் கட்டமைக்கப்பட்டது. சுமார் 3,00,000 விண்ணப்பங்களில் குடியுரிமை தேர்வின் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் குறந்த அளவு கல்வி தகுதியாக உள்ளது.

0 comments:

Post a Comment