Sunday, February 3, 2013

பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி-பாகம் 2

எனது சொந்த முதலீட்டு கதையை நான் ஏன் சொன்னேன் என்பதை விளக்கியாக வேண்டும்.முதலீடு செய்யுமுன் நான் என்னென்ன steps எடுத்தேன், எனது information search process என்ன என்பதை சொல்லவே நான் எனது சொந்த முதலீட்டு கதையை சொன்னேன்.நீங்கள் முதலீடு செய்யுமுன், அது பங்கு சந்தையாக இருப்பினும்,வேறெதுவாக இருப்பினும் இதுபோல் ஒரு search process அவசியம். இப்போது பப்பட்டின் முறைக்கு போவோம்.பப்பட்டின் முறை மிகவும் எளிமையானது என்று சொன்னேன்.அதை பாயின்ட் பை பாயின்டாக விளக்குகிறேன். 1.பங்கு சந்தை என்பது தொழில்.சூதாட்டமல்ல: இதை முக்கியமாக ஞாபகத்தில் கொள்ள வேண்டும்."எனக்கு 1 மாதத்தில் போட்ட முதலீடு டபிளாக வேண்டும்.காலையில் போட்ட பணம் இரவுக்குள் ட்ரிபிளாக வேண்டும்" என்ற நோக்கம் உங்களுக்கு இருந்தால் தயவு செய்து பங்கு சந்தைக்கு வராதீர்கள்.லாட்டரி,குதிரை பந்தயம்,கேசினோ என்று ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பங்கு சந்தையில் இம்மாதிரி சம்பாதிப்பவர்கள் உண்டு.பெரும்பாலானோர் 1வாரம், 2 மாதம் என்று காலக்கெடு வைத்துக்கொண்டு பங்கு வர்த்தகத்தில் இறங்குவதும் உண்டு."1 லட்சம் எனக்கு சாதாரண தொகை.இரண்டு வாரத்தில் டபிளாக வேண்டும்.பணம் போனாலும் பரவாயில்லை.வந்தால் மலை.போனால் hair" என்று முடிவு கட்டிகொண்டு மஞ்சள் பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு புரொக்கரிடம் போகிறவர்கள் உண்டு.இம்மாதிரி ஆட்களை தான் புரொக்கர் தேடிக்கொண்டிருப்பார்.100க்கு 99.99 சதவிகிதங்களில் வருவது மலையல்ல, hair தான் இம்மாதிரி ஆட்கள் தயவு செய்து பங்கு சந்தைக்கு வராமல் இருப்பது நல்லது.அல்லது இந்த கட்டுரையை படிக்காமல் இருப்பது நல்லது.இம்மாதிரி சம்பாதிக்க வாரன் பப்பட் ஐடியா ஏதும் சொல்லவில்லை. "பங்கு சந்தை என்பது தொழில்" என்று பப்பட் சொன்னார்.ஒரு தொழிலில் 1 லட்சம் போடுமுன் அல்லது 10 கோடி போடுமுன் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாய் நடவடிக்கைகள் எடுப்போம்?ஏன் பங்கு சந்தையில் மட்டும் இம்மாதிரி நாம் செய்வதில்லை?மில்லியன் டாலர் முடிவுகளை 5 நிமிடத்தில் எடுக்கும் மடத்தனம் பங்கு சந்தையில் மட்டுமே காணப்படும். புரோக்கர் ஆபீசில் பெரும்பாலும் இது தான் நடக்கும்.பங்கு வாங்க விரும்புவோர் புரோக்கர் அலுவகத்தில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருப்பார்கள்." X கம்பனி சூப்பரா போகுது சார்.ஒரு வாரத்தில் பணம் அள்ளிடலாம்" என்று புரோக்கர் சொல்லுவார்."சரி ஒரு ரெண்டு லட்சத்தை அதுல கட்டு" என்று குதிரை மீது பணம் கட்டுவது போல் வாடிக்கையாளர் சொல்லுவார்.ஒரு வாரம் கழித்து கிடைப்பது திருநெல்வேலி அல்வா தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ? டே ட்ரேடிங்(day trading) என்ற இன்னொரு வில்லங்கமும் பங்கு சந்தையில் உண்டு.ஒரே நாளில் கொழுத்த லாபம் (பெரும்பாலும் பெருத்த நஷ்டம்) சம்பாதிப்பது.இம்மாதிரி விவகாரங்களுக்கு எல்லாம் பப்பட்டின் முறையில் இடம் இல்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ? ஆப்ஷன் என்ற இன்னொரு முறை பங்கு சந்தையில் உண்டு.இந்த விளையாட்டு மிகவும் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு தான் சாத்தியம்.இது தெரியாதவர்கள் புரோக்கரிடம் கேட்டு ஆப்ஷன்களை வாங்குவதும் உண்டு.பப்படுக்கு இம்மாதிரி தொழில் நுட்பம் எல்லாம் தெரியாது என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.ஆப்ஷனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான்.அந்த பக்கமே போகக்கூடாது என்பது தான் அது.அது என்ன என்று கூட தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.கவுண்டமனியை கண்டால் செந்தில் எவ்வளவு காத தூரம் ஓடுவாரோ அதே தூரம் நீங்கள் ஆப்ஷன் என்ற பெயரை கேட்டால் ஓட வேண்டும். ஆப்ஷனிலும்,டே ட்ரேடிங்கிலும் எத்தனை ஆயிரம் கோடிகள் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பது தெரிந்தால் நாம் அரண்டு போவோம்.(எத்தனை பனம் அதில் தொலைகிறது என்பது தெரிந்தால் அதை விட அரண்டு போவோம்) ஆப்ஷனிலும்,டே ட்ரேடிங்கிலும் சம்பாதிப்போர் உண்டு.கேசினோவில் சம்பாதிப்பவர்களும் உண்டு.இவற்றில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று சொல்லும் புத்தகங்கள் உண்டு.இவற்றில் ஈடுபட விரும்புவோருக்கு எனது வாழ்த்துக்கள்+அனுதாபங்கள்.பப்பட்டின் முறையில் இந்த சூதாட்டங்களுக்கு இடம் இல்லை என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment