Monday, April 23, 2012

படித்து விட்டு தருகிறேன் என்று இரவல் பெற்று... : புத்தக வெளியீட்டில் வித்தியாசமான சமர்ப்பணம்


புத்தகங்கள் கருப்பு மையினால் அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்ல; அவை மனிதனின் சிந்தனையை மெருகூட்டும் ஆயுதங்கள். அப்படிப்பட்ட ஆயுதங்களை உருவாக்கும் எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளை பிடித்தமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்வது தமிழ்ப் புத்தக வெளியீட்டில் மரபாகப் பின்பற்றப்படுகிறது.
அம்மா, அப்பாவுக்கு...:
பொதுவாக அம்மாவுக்கு, அப்பாவுக்கு என்று தான் சமர்ப்பணம்
எழுதுவர். ஆனால், புத்தகங்களை வித்தியாசமாக சமர்ப்பிப்பவர்களும் உண்டு. சில சுவாரசியமான காணிக்கைகள்:
* குடகு என்ற புத்தகத்தை எழுதிய ஏ.கே. செட்டியார், அதை, "கருணை பொழியும் காவிரி அன்னையின் திருவடிகளுக்கு' காணிக்கையாக்கியுள்ளார்.
* காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள் என்ற புத்தகத்தை எழுதிய கூத்தங்குடி அழகு. ராமானுஜன், "உலக மனிதர்களின் பசித்துயர் களைய வாய்க்கால் நீரை, வயலில் நிரப்பிப் பயிர்கள் வளர்க்கும் மடை வயல்களுக்கு' என்று அர்ப்பணம் செய்துள்ளார்.
* ஜனகண மன என்ற புத்தகத்தை எழுதிய மாலன் "சரித்திரம் தேர்ச்சி கொள்' என கட்டளையிட்ட கவிஞனுக்கும் அதைக் கற்றுக் கொடுத்த ஜவஹருக்கும் என் தோட்டத்திலிருந்து இந்த எளிய ரோஜா என்று சமர்ப்பணம் செய்துள்ளார்.

சக கலைஞர்களுக்கு...
* கீதாரி என்ற புத்தகத்தை எழுதிய க.தமிழ்ச்செல்வி, அதை, "ஆடுகளுடன் வெட்ட வெளிதனை மெய்யெனக் கொண்டு வாழும் கீதாரிகளுக்கு' காணிக்கையாக்கியுள்ளார்.
*மனப்பத்தயம் என்ற புத்தகத்தை எழுதிய யுகபாரதி அதை, "படித்துவிட்டுத் தருகிறேன் என இரவல் பெற்று, தொலைந்துவிட்டதாய் தர மறுக்கும் புத்தகப் பிரியர்களுக்கு' சமர்ப்பணம் செய்துள்ளார்.
*பட்டாம்பூச்சி விற்பவன் என்ற புத்தகத்தை எழுதி நா. முத்துக்குமார் அதை புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
* சாப்பாட்டு புராணம் எழுதிய சமஸ், அதை, "நான் ரசித்து சாப்பிடுவதை உலகின் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்றாகக் கருதும் என்னுடைய அம்மாவிற்கு' காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.
*ஐந்தாறு வகுப்பறைகளும் பத்து, பதினைந்து காக்கைகளும் என்ற புத்தகத்தை எழுதிய ஈஸ்வர சந்தான மூர்த்தி, அந்தப் புத்தகத்தை "எப்பொழுதும் நேர்மையோடு வாழும் என் குழந்தை சமூகத்திற்கு' என்று சமர்ப்பணம் செய்துள்ளார்.
* உடைந்த இருட்டு என்ற புத்தகத்தை எழுதிய வலம்புரி லேனா, இந்தப் புத்தகத்தை வெயில், மழை பாராது கடிதங்களை அள்ளித் தந்து போகும் இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் பட்டுவாடா ஊழியர்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
* பெண் எழுதும் காலம் என்ற புத்தகத்தை அ. வெண்ணிலா, பலாத்காரம், சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகளால் துன்புறுத்தலுக்கும் நசிவுக்கும் உள்ளான லட்சக்கணக்கான பெண்களின் நினைவுகளுக்குச் சமர்ப்பித்துள்ளார்
* உய்... உய்... ரசிகர் மன்றங்களின் நோக்கும்-போக்கும் என்ற நூலை எழுதியுள்ள கோவி.லெனின், கல்லூரிப் பருவத்தில் பாடம் போதித்த தஞ்சை-திருவாரூர் சுற்று வட்டாரத் திரையரங்குகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
* தானியம் கொத்தும் குருவிகள் என்ற நூலை எழுதிய ப்ரணா என்னைப் பாதித்த, என்னை எழுத வைத்த அனைத்து நிகழ்வுகளுக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாட்டிக்கு...:
* கதைகள் தீர்ந்தபோது அம்மா சொன்ன கதைகள் என்ற புத்தகத்தை எழுதிய செந்தில்பாலா இன்றைக்கும் ஆல இலை பொறுக்கி வரப் போயிருக்கும் பாட்டி பட்டம்மாளுக்கும் உலர்த்தி படிய வைத்து தைத்து, "கோட்டை'யாக்கி விற்கும் தாத்தா தனபாலுக்கும் தனது புத்தகத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
*தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம் என்ற புத்தகத்தை எழுதியுள்ள கீரனூர் ஜாகிர் ராஜா, பெரியகோவில் புல்வெளிக்கு என்று சமர்ப்பணம் செய்துள்ளார்.இவ்வாறு தமிழ்ப் புத்தகங்கள் வித்தியாசமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நம்மை புரட்டும் புத்தகங்கள் எங்கே?
பக்கங்களை நம் விரல்களை புரட்டுவதற்குப் பதில், நம்மை புரட்டிப் போடும் புத்தகங்களே நல்ல புத்தகங்கள். அத்தகைய புத்தகங்களைக் கொண்ட நூலகங்களில் ஒன்று, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம்.அண்ணா சாலையில் அமைந்துள்ளது. 1947 ம் ஆண்டில் சிறிய கட்டடத்தில் இயங்கியது. மூன்று சக்கர சைக்கிளில் வீடு வீடாகப் புத்தகங்களைக் கொடுத்து, வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியது. பின்னர், இப்போதைய நூலகக் கட்டடம் கட்டப்பட்டு, 1965ல் இப்போதைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

ஒரு லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்கள்:
*எட்டாயிரத்து 878 சதுரஅடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. வாழ்க்கை வரலாறு, தத்துவம், மொழியியல், மருத்துவம், சமயம், கணினி, வேதியியல், உயிரியல் உள்ளிட்ட 44 துறைகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆங்கில, இந்தி நூல்களும் அடக்கம்.
*போட்டித் தேர்வர்களுக்காக குடிமைப் பிரிவும், சிறுவர் பிரிவும் உள்ளன.
*சிறுவர்களுக்கான பிரிவில் சிறுவர் பாடல், படங்கள் மட்டுமே உள்ள நூல்கள், காமிக்ஸ் கதைகளடங்கிய நூல்கள் இருக்கின்றன. இவற்றை வாசிக்க இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் வருகின்றனர்.
*தினந்தோறும் 600க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகின்றனர்.
*150 பேர் நூலகத்தின் உறுப்பினர்கள். அவர்கள் தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட நூல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.

புலியை முறத்தால் துரத்திய கதை இனி எடுபடாது:
புதுமையை தேடும் தமிழ் வாசகர்கள்: இணையதள வளர்ச்சியால், புத்தக விற்பனை மற்றும் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என, புத்தக கடைகாரர்கள் தெரிவித்தனர்.

புக்லேண்ட் சீனிவாசன் தெரிவித்ததாவது:நவீன இலக்கியங்கள் மீதான தேடல் அதிகரித்து வருகிறது. புலியை முறத்தால் அடித்து துரத்தி, வீரத்தை நிலை நாட்டினாள் பார் தமிழச்சி என்பது போன்ற கதைகளை எவ்வளவு நாளைக்குத் தான் படிப்பது; புதிய சிந்தனைகள் பிறக்க வேண்டாமா என, கேட்கின்றனர்.உதவி செய்யும் இணையம் இணையதள வசதிகள் அதிகரித்து விட்டன. அதனால், புத்தகம் வாசிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது ஏற்புடையதல்ல. இணையம் வந்து விட்டதால், பொத்தானை தட்டியவுடன், புத்தகங்களின் பட்டியல் வருகிறது. இணையதள முகவரியில் உரையாடல்கள் நடந்து, மாலைக்குள் புத்தகம் கைக்கு சேர்ந்து விடுகிறது. இணையத்தில் படிக்க ஆர்வம் இருந்தால், ஏன் புத்தகங்களை வாங்குகின்றனர்.தாய், தந்தை, உறவினர், ஆசிரியர் புத்தகப் பிரியர்களாக இருந்து, அவர்களின் தாக்கம் உள்ளவர்கள் தான் இப்போது வாசகர்களாக, படைப்பாளிகளாக நீடிக்கின்றனர். எதிர்காலத்தில், படைப்புலகை தீர்மானிக்கக் கூடிய சிறுவர்களுக்கு புத்தக வாசிப்புத் தன்மையை கொண்டு சேர்ப்பதில், மக்கள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். இந்த போக்கு, எதிர்கால சந்ததியை பாழாக்கிவிடும்.

வாழ்வை வெல்லும் வாசிப்பு:
மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக சிறுவர்கள் பார்க்கப்படுகின்றனரே தவிர, புத்தக வாசிப்புக்கு உட்படுத்துவதில்லை. அதனால், அவர்களுக்கான உலகத்தை நாம் பூட்டியே வைத்திருக்கிறோம். அதனால் தான் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். பரந்து விரிந்து கிடக்கும் புத்தக உலகிற்குள் சிறுவர்களை அழைத்துச் செல்ல வேண்டியது, காலத்தின் கட்டாயம்.இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

திருநங்கையரிடம் மாற்றம்ஏற்படுத்திய "வாடாமல்லி':
திருநங்கையர் வாழ்வில் மாற்றத்தைஏற்படுத்தியது, எழுத்தாளர் சமுத்திரம்எழுதிய "வாடாமல்லி' என்ற நாவல்தான்என, தமிழக திருநங்கையர் ஒப்புக்கொள்கின்றனர்.

எழுத்தாளர் திருநங்கை ரேவதி: மூத்ததிருநங்கையர், "பிச்சை, பாலியல் உள்ளிட்டவற்றிற்கே நாம் படைக்கப்பட்டோம்; அதை கேவலமாக நினைக்கக்கூடாது' என்றனர். பின் வந்த நாங்கள்அதை மாற்றினோம். எழுத்தாளர்கள்,கைவினை கலைஞர்கள், சமையல் கலைஞர்கள் என, எங்கள் வாழ்வை மாற்றியுள்ளோம். இவை, புத்தக வாசிப்புகளால்தான் சாத்தியமானது. "வாடாமல்லி' எங்கள் வாழ்க்கையை மாற்றிய படைப்பு.எழுத்தாளர் திருநங்கை பிரியா பாபு:எழுத்துகளை விட பலமான ஆயுதம் எதுவுமில்லை. "அரவாணிகள் சமூக வரைவியல், மூன்றாம் பாலின் முகம்' உள்ளிட்டவை திருநங்கையரின் வாழ்க்கைப் பதிவுகள் குறித்து நான் எழுதியவை. எங்கள் சமுதாயத்தவரிடம் விழிப்பை ஏற்படுத்த, "எழுத்தாளர் பயிற்சி முகாம்'நடத்தி வருகிறோம். இதனால்,வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்யமுடியும்.

"குழந்தைகளை கொண்டாடாத சமூகத்துக்கு வரலாறு கிடையாது':
குழந்தைகளை அறிவுப்பூர்வமாக வளர்க்கத் தமிழில் புத்தகங்கள்வெளி வருகிறதா? என்பது குறித்து பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் கூறியதாவது:
தமிழில் குறைவுஇந்திய அரசின் நேஷ்னல் புக் டிரஸ்ட் நிறுவனம் குழந்தைகளுக்காக,நேரு குழந்தைகள் புத்தகாலயம் என்ற ஒரு பிரிவைஆரம்பித்து, குழந்தைகளுக்கான புத்தகங்களைவெளியிட்டு வருகிறது.இந்தி, மலையாளம்,பெங்காலி உள்ளிட்டமொழிகளில்தான் குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிகளவில் வெளியிட்டு வருகிறது. தமிழில்வெளிவரும் புத்தகங்கள்குறைவு. இந்த நிறுவனம்தமிழில் அதிகமான புத்தகங்களை வெளியிடவேண்டும்.மதிப்பெண்கள்தமிழகத்தில், தமிழ்வழியில் படிக்கும் குழந்தைகளே அதிகம்.எனவே, அவர்களுக்காகதமிழில் அதிக புத்தகங்கள்வரவேண்டும்.வெளிநாடுகளில் குழந்தைகளின் படிப்பார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, பாடப்புத்தகம் அல்லாத குழந்தைகள் புத்தகத்தை படிக்கும் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் போடும் வழக்கம்இருந்து வருகிறது. அதுமாதிரியான வழக்கம் தமிழகத்திலும் ஏற்படுத்தினால் நம் குழந்தைகள் மத்தியில், வாசிப்புபழக்கம் அதிகரிக்கும்.தமிழ்ச் சமூகம் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.இவ்வாறு நாகராஜன்தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment