Friday, March 9, 2012

ஆன்மிக காரியங்களின் அங்கமாக திகழும் நாகலிங்க மலர்கள்!




குன்னூர் : பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையில் ஒரு அங்கமாக திகழும் நாகலிங்க பூக்கள், குன்னூர் பர்லியாரில் உள்ள மரங்களில் பூத்து குலுங்குகின்றன. பூஜை, வழிபாடுகளில் இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களில், நாகலிங்க பூக்களும் ஒன்று. இந்த பூவின், செந்நிற இலைகளின் மையத்தில், பாம்பின் முகத்தை போன்ற தோற்றமும், அதற்குள் இருக்கும் விதை, லிங்கத்தின் வடிவத்தை நினைவுப்படுத்துவது போன்றும் இருப்பதால், மக்களின் ஆன்மிக காரியங்களில் நாகலிங்க பூக்கள் தனியிடம் வகிக்கின்றன. குறிப்பாக, சிவன் கோவில்களில் இந்த பூக்களை வைத்து, பக்தர்கள் வழிபடுகின்றனர். "நாகலிங்க மரத்துக்கு சில மருத்துவ குணங்களும் உள்ளன. இலை, பழங்களில் உள்ள டைஹைட்டேரா டையாகசின்டோலோ, குயினாசோலோன், டிரிப்டான்ரின், இண்டிகா இன்டுருபின், ஐசாடின் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை நிரம்ப பெற்றவை; இவை தோளின் மிருதுவான பகுதிகளில் பரவும் பூஞ்சை, பாக்டிரியாவை அழிக்கும் சக்தி கொண்டவை; இதன் பட்டை மலேரியா சுரபியை கட்டுப்படுத்தும். இதன் இலையை நன்றாக அரைத்து, பூஞ்சை கிருமியால் ஏற்படும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவினால், அவை குணமாகும். இதன் உலர்ந்த பழங்கள் தரையில் விழுந்து பெரும் சப்தத்தை ஏற்படுத்தும் என்பதால், பல கோவில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோவில் முகப்பில் வளர்க் கப்படுகின்றன என தாவரவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பர்லியார் பகுதியில் உள்ள சிறப்பு பெற்ற நாகலிங்க மரத்தில் உள்ள பூக்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment