Sunday, March 11, 2012

பால் பண்ணையாக மாறிய, சாய ஆலை: திருப்பூரில் ஓர் மாற்றுத்தொழில் "புரட்சி'

திருப்பூர்: சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, கோர்ட் உத்தரவுப்படி, திருப்பூரில் எண்ணற்ற சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. அதில் ஒரு சாயஆலையை, மாட்டுப்பண்ணையாக மாற்றி, பால் உற்பத்தி தொழிலை இறங்கிவிட்டார், அதன் உரிமையாளர். இதன்மூலம், தன்னை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்பையும் அளித்துள்ளார்.

திருப்பூர் அருகே மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டுவபாளையத்தில் சாய, சலவை ஆலைகள் இயங்கி வந்தன. ஒவ்வொரு ஆலையிலும் 20 முதல் 25 குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். சாயக்கழிவு நீரால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக எழுந்த விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்த 2011, பிப்., 2 முதல் சாய ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதனால், பல சாயஆலைகள் திருப்பூரில் இருந்து வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்துவிட்டன. வேட்டுவபாளையத்தில் மூடப்பட்ட தனது சாய ஆலையை, மாட்டுப்பண்ணையாக மாற்றி, புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளார், அதன் உரிமையாளர் சுப்ரமணி. தற்போது, இவர் பசுமாடு வளர்ப்பில் "பிஸி'யாகிவிட்டார்.

சுப்ரமணி கூறியதாவது: மங்கலம் பொதுசுத்திகரிப்பு நிலையத்தின் உறுப்பினரான எனது சாய ஆலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். அவர்களுக்கு, தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். சாயத்தொழில் முடங்கியதால், தொழிலாளர்களில் பலர் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். சில குடும்பங்கள் மட்டும், எனது தோட்டத்தில் வேலைசெய்துகொண்டு இங்கேயே தங்கிவிட்டனர். இவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை உருவாக்க முடிவு செய்தேன். கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்களின் ஆலோசனைப்படி, அதிக பால் கறக்கும் "ஜெர்சி' இன மாடுகளை வாங்கி பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனது பண்ணையில் எருமைகள், கன்றுகள், "ஜெர்சி' இன மாடுகள் என 40 கால்நடைகள் உள்ளன. தினமும் 180 லிட்டருக்கும் அதிகமாக பால் தருகின்றன. சாயத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, பராமரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னர், சாயத்தொழிற்சாலை பணியில் இருந்த வேன் டிரைவர்கள், பிற தொழிலாளர்கள் ஆகியோர் வீடு வீடாக சென்று பால் சப்ளை செய்யும் பணியை கவனிக்கின்றனர். தண்ணீர் கலக்காமல் பால் வழங்குவதால், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மேலும், மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளேன். முன்பு, எனது ஆலையில் சாயமிடப்பட்ட துணிகள் உலர்த்தப்படும் இடங்களில் மாடுகளை கட்டி பராமரிக்கிறோம். மெஷின்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை தீவனக் குடோனாக மாற்றிவிட்டேன். ஒருவேளை, மீண்டும் சாய ஆலைகளை இயக்கும் வாய்ப்பு வந்தாலும், மாட்டுப்பண்ணை தொழிலை தொடர்வேன். இவ்வாறு, சுப்ரமணி தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment