Sunday, March 11, 2012

மீண்டும் மீண்டும் திருமணம்...

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பர் நம் ஊர் பெரியவர்கள். கணவன் - மனைவி இடையேயான உறவு, நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு கூறுவது வழக்கம். மேற்கத்திய நாடுகளில் இதெல்லாம், நடைமுறைக்கு ஒத்து வராத விஷயம். பெரும்பாலான தம்பதிகள், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, விவாகரத்து பெற்று, பிரிந்து விடுகின்றனர். அவர்களை பொறுத்தவரை, திருமணம் என்பது, மிகவும் சாதாரணமான விஷயம். சிலர், தங்கள் வாழ்நாளில் பத்து திருமணங்கள் கூட செய்து கொள்கின்றனர். திருமணம் ஆகாமலேயே, குடும்பம் நடத்தும் கலாசாரமும் அங்கு உள்ளது.

இந்நிலையில், இன்னும் கூட சில வெளிநாடுகளில், திருமண வாழ்வை, உயிருக்கும் மேலாக நேசிக்கும், சில தம்பதிகள் இருக்கின்றனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இவான், வயது 41, சூசன், வயது 39 ஆகியோர், அப்படிப்பட்ட தம்பதியர். இவர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. காதல் திருமணம் தான். தேவாலயம் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கண் மூடி, கண் திறப்பதற்குள் ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இருவரும் தங்களின் முதல் ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
சூசனுக்கு திடீரென ஒரு ஐடியா உதித்தது. "திருமண நாளை கொண்டாடுவதற்கு பதிலாக, இதே நாளில் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் என்ன?' என, தன் கணவரிடம் கேட்டார். அவரும், இதே மனநிலையில் இருக்கவே, உடனடியாக ஓ.கே., சொன்னார்.

இதையடுத்து, முதலாமாண்டு திருமண நாளில், இந்த காதல் தம்பதி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது, என்னென்ன சடங்குகள் நடக்குமோ, அவை அனைத்தும் நடந்தன. வழக்கம்போல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து கொடுத்து அசத்தினர். பதிலுக்கு அவர்களும், புதுமணத் தம்பதிக்கு பரிசு கொடுப்பது போல், இவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.

இந்த விழாவுக்கு வந்திருந்த அனைவருமே, "உங்களின் இந்த ஐடியா, மிகவும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. கணவன் - மனைவிக்கு இடையோயன அன்பை பலப்படுத்துவதற்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு...' என, பாராட்டினர்.

இதைக் கேட்டதும், இவானும், சூசனும், ஆண்டு தோறும் திருமண நாளின்போது, வெவ்வேறு ஊர்களுக்கு சென்று, வித்தியாசமான பின்னணியில் திருமணம் செய்து கொள்வது என, முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 15 ஆண்டுகளாக, இருவரும், திருமண நாளின்போது திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரிசோனா, லாஸ்வேகாஸ், பாரீஸ், மெக்சிகோவின் காபோ மற்றும் ஹவாய் போன்ற இடங்களுக்கு சென்று, திருமணம் செய்து கொண்டனர். பறக்கும் பலூனில் சென்று திருமணம் செய்து கொள்வது, டால்பின்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்வது என, பல புதுமைகளையும் அரங்கேற்றினர்.

ஏழாவது திருமண நாளின்போது, சூசன் கர்ப்பமாக இருந்தார். அப்போதும், அவர்களின் திருமண விழா, கோலாகலமாக நடந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும், தங்களின் திருமண விழாவை, இவர்கள் கைவிடவில்லை. குழந்தைகளின் முன்னிலையில், மீண்டும், மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

சூசன் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து கொள்ளும் போதும், ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. புதிதாக திருமண வாழ்வை துவங்குவது போன்ற அனுபவமும் ஏற்படுகிறது. திருமண வாழ்வின் பெருமையை, மற்றவர்களுக்கு <உணர வைக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம்...' என்றார்.

0 comments:

Post a Comment