Sunday, March 18, 2012

ஏன் ஓய்வு பெற வேண்டும்? * சச்சின் கேள்வி

 
மிர்புர்:""நல்ல "பார்மில்' <உள்ள நிலையில் ஓய்வு பெறச் சொல்லக் கூடாது. என்னால் இன்னும் விளையாட முடியும்,' என, சச்சின் தெரிவித்தார்.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. டெஸ்ட், ஒருநாள் அரங்கில் 100 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், உலக கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என விமர்சனம் எழுந்தது. 
இப்போது 100வது சதம் அடித்துள்ள நிலையில், இவரது ஓய்வு குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்து சச்சின் கூறியது:
நூறாவது சதம் குறித்து, நான் நினைத்துக் கொண்டிருந்தது இல்லை. உலக கோப்பை தொடரை வெல்வதில் தான் கவனம் செலுத்தி வந்தேன். உலக கோப்பை வென்று தேசத்துக்கு கொண்டு வரும் திருப்தியை தவிர, வேறெதுவும் மகிழ்ச்சியை தந்து விடாது. எனது வாழ்க்கையின் முக்கியமான தருணம், இந்திய அணி உலக கோப்பை வென்றது தான்.
இத்தொடருக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்தால், 100வது சதத்தை அடித்திருக்கலாம் என்றனர். நான் லார்ட்சில் தான் சதமடிக்க விரும்புவதாக சிலர் கூறினர். ஆனால், நாம் நினைக்கும் போதெல்லாம் சதம் அடித்துவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
எப்போது நல்ல "பார்ம்' உள்ளதோ, அப்போது தேசத்துக்காக திறமையை வெளிப்படுத்த வேண்டும். இனிமேல் தேசத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்ற உணர்வு எப்போது வருகிறதோ, அந்த நிமிடமே நான் ஓய்வு பெற்று விடுவேன். இதை மற்றவர்கள் சொல்ல வேண்டிய தேவையில்லை. 
நான் ஓய்வு பெற வேண்டும் என சிலர் சொல்கின்றனர். சிறப்பான "பார்மில்' <உள்ள நேரத்தில், இப்படிச் செய்வது சுயநலமானது.
மற்றபடி கடந்த ஒரு ஆண்டில் எனது பேட்டிங் நன்றாகத் தான் இருந்தது. சில நேரங்களில் எடுபடாமல் போனது உண்மை தான். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, கடந்த ஆண்டில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்த பின், இந்த ஒரு ஆண்டு கடினமாக இருந்தது. 
அதேநேரம், தனிப்பட்ட முறையில் சாதனைகளுக்காக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இப்படி கூறுபவர்கள் குறித்தும் எனக்கு கவலையில்லை. 
தேசத்துக்காக போட்டிகளில் பங்கேற்கும் பெரிய வேலை எனக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற தேவையற்ற கருத்துக்களுக்கு பதில் அளிப்பதை தவிர்த்து விட்டு, ரன்கள் எடுப்பது, அணியை வெற்றி பெற வைப்பது போன்ற வேலைகளில் கவனம் செலுத்த போகிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

எப்போதும் சவால் தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது குறித்து சச்சின் கூறுகையில்,"" பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவாலானது. அந்த அணியில் சிறப்பான வீரர்கள் பலர் உள்ளனர். ஏதாவது தவறு செய்து விட்டால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இந்த போட்டி எங்களுக்கு முக்கியமானது,'' என்றார்.

எட்டினால் தான் நிற்குமா
டெஸ்ட், ஒருநாள் அரங்கில் மொத்தம் 100 சதம் அடித்துள்ள சச்சின், ஒருநாள் போட்டிகளில் இதுவரை 95 அரைசதம் அடித்துள்ளார். இன்னும் 5 அரைசதம் அடித்து அரைசதத்தில் "100' என்ற இலக்கை எட்ட வேண்டும்.
* ஒரு நாள் அரங்கில் 49 சதம் அடித்துள்ள இவர், 50வது சதம் அடிக்க விரும்பலாம். இந்த இலக்குகளை எட்டி விட்டு தான் ஓய்வு பெறுவாரா...
 
நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment