கடந்த இதழ்களில் பங்கு என்றால் என்ன என்றும், அதை வாங்குவதற்கும் விற்பதற்குமாக இருக்கும் சந்தையான எக்ஸ்சேஞ்சுகள் பற்றியும் விளக்கமாகச் சொல்லி இருந்தேன். இந்த இதழில் பங்குச் சந்தையில் என்னென்ன விஷயங்கள் பரிவர்த்தனை ஆகிறது என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரினால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பெரிய அளவில் மாற்றம் கண்டிருப்பது போல பங்குச் சந்தையும் மாறியிருக்கிறது. முன்பு ஒரு பங்கை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டுமெனில் பங்குச் சந்தைக்கே போனால்தான் உண்டு. இப்போது அப்படியில்லை; நம் வீட்டில் இருந்தபடியே எவ்வளவு பங்கை வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம். எல்லாம் கம்ப்யூட்டரின் கைங்கர்யம்!


கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை நடப்பதால் ஏதாவது மோசடி நடந்துவிடுமோ என்கிற பயமும் தேவையில்லை. ஒரு பங்கு வாங்கப்படும் போது, அந்தப்பங்கை யார் வாங்குகிறார்கள்? என்ன விலை? எந்த நொடியில் வாங்கப்பட்டது என்கிற அளவுக்கு துல்லியமான தகவல்கள் நமக்குக் கிடைத்து விடும். எனவே, எந்த ஜித்தனாலும் சிறு மோசடியைக் கூட செய்ய முடியாது. அது மட்டுமல்ல, அரை நொடிப் பொழுதில் உங்களுக்குத் தேவையான பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். இன்று கிராமத்தில் உள்ள சாதாரண மனிதனும் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம், கம்ப்யூட்டர்தான்.


பங்குச் சந்தையில் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்ததால் விளைந்த ஒரே ஒரு பாதிப்பு, பிராந்திய சந்தைகளின் மவுசு கொஞ்சம் குறைந்ததுதான். கல்கத்தா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், டெல்லி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் போன்றவை ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தன. ஆனால் இன்றோ முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை செய்யும் வசதி இல்லாததால் என்.எஸ்.இ-யுடன் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றன.


சரி, பங்குச் சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது?
நம்மில் பலரும் பங்குச் சந்தை என்றாலே அங்கே பங்கு அல்லது ஷேர் மட்டுமே விற்கப்படுவதாக (அல்லது வாங்கப்படுவதாக) நினைக்கிறார்கள். இது தவறு. பங்குச் சந்தையில் நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன. அது தவிர, வேறு சிலவும் வர்த்தகமாகின்றன. அவை:

1. கடன் பத்திரங்கள் (அரசாங்கம் மற்றும் தனியார்) 2. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
3. இ.டி.எஃப்-கள் (தங்கம் உட்பட)
4. எஃப் அண்ட் ஓ.
5. கரன்சி


நம் நாட்டில் பல பிராந்திய எக்ஸ்சேஞ்சுகள் இருந்தாலும் தேசம் முழுக்கப் பரவியிருக்கிற எக்ஸ்சேஞ்சுகள் என்.எஸ்.இ.யும் பி.எஸ்.இ.யும் மட்டுமே. பெரிய நிறுவனங்களின் பங்குகள் இந்த இரண்டு பெரிய சந்தைகளிலும் வர்த்தகமாகின்றன. சில நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் பி.எஸ்.இ-யில் மட்டுமே லிஸ்ட் செய்யப் படுகிறது. அதிக நிறுவனங்கள் லிஸ்ட் ஆன எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை பி.எஸ்.இ-க்கும் தினசரி வர்த்தகம் அதிகமாக நடக்கும் எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை என்.எஸ்.இ-க்கும் உண்டு.


ஆனால் உலகத்தின் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இரு எக்ஸ்சேஞ்ச் மட்டும் போதாது. இன்னும் நான்கைந்தாவது வேண்டும். சமீபத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் இன்னுமொரு பங்குச்சந்தையை மிகப் பெரிய அளவிலும், அதிவேகமான தொழில்நுட்பத்துடனும் தொடங்க முயற்சி செய்து வருகிறது. அடுத்த ஆண்டில் அதற்கு செபியிடமிருந்து அனுமதி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எல்லாம் சரி, நம் நாட்டில் பங்குச் சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று கேட்கிறீர்களா?


கவலையே வேண்டாம்! அடுத்த பதினைந்து வருடங்களுக்கு வளர்ச்சி மிகவும் அபாரமாக இருக்கும். முதலீட்டாளர்கள் பெரும் அளவு சம்பாதிக்க வாய்ப்புள்ளது. வியாபாரங்களும், அதனால் லாபமும் உயர்வதால் பங்குகளின் மார்க்கெட் மதிப்பு உயரும். உலக அளவில் பெயர் சொல்லக்கூடிய பல பெரிய நிறுவனங்கள் நம் இந்தியாவில் உருவாகும். பல நிறுவனங்கள் தங்கள் தொழில்களை விரிவுபடுத்த, சந்தையில் தங்களது பங்குகளை விற்கும். வெளிப்படைத்தன்மை இன்னும் அதிகரிக்கும். முதலீட்டாளர்களின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால் இனி வரும் ஆண்டுகளில் பங்குச் சந்தையின் வளர்ச்சியும் அதனால் முதலீட்டாளர்களின் வளர்ச்சியும் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னொரு சந்தேகம்கூட உங்களுக்கு வரலாம். பங்குச் சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது?


முக்கியமான இந்த கேள்விக்கும் பதில் சொல்லிவிடுகிறேன். பங்குச் சந்தை என்பது குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வது போன்ற சூதாட்டமல்ல. அது ஒரு வகையான முதலீடு. நீண்ட காலத்துக்கு உங்கள் பணத்தைப் போட்டு பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய முதலீடு. ஒரு வீடு வாங்குகிறோம். அதன் மதிப்பு என்ன, என்ன என்று தினமும் நாமும் கேட்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இன்று விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என தினமும் கணக்கு போட்டுப் பார்ப்பதில்லை. அது போலத்தான் நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பணமும். தினமும் அதன் மதிப்பை பார்ப்பதால் நமக்கு டென்ஷன்தான் அதிகரிக்குமே ஒழிய, பங்கின் விலை ஏறிவிடாது.


வீடு, நிலத்தில் முதலீடு செய்வது போல நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தீர்களேயானால், பங்குச் சந்தை முதலீடும் முழுக்க முழுக்க பாதுகாப்பானதே! நீங்கள் வீடு வாங்கும் போது சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு அந்த வீடு தகுதியானதா, இன்னும் குறைவான விலைக்கு வாங்க முடியுமா என பல கோணங்களில் சிந்தித்து வாங்குகிற மாதிரி பங்குகளையும் பல விதங்களில் ஆராய்ந்து வாங்கினால் உங்களுக்கு இழப்பு வர வாய்ப்பேயில்லை.


ஆனாலும் பங்குச் சந்தையில் பலரும் ஏமாறக் காரணம், சரியான வழிகாட்டி இல்லாததுதான். அல்லது போதிய அனுபவம் இல்லாமல் தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டதால்தான். இந்த இரண்டையும் நீக்கி விட்டு, முறையான வழிகளைக் கையாண்டு முதலீடு செய்து, பொறுமையாக இருந்தால் நீங்களும் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவது உறுதி.