முந்தைய அத்தியாயத்தில், பங்குச் சந்தையில் ஏன் ஈடுபட வேண்டும் என்கிற கேள்விக்கு விளக்கமாகப் பதில் சொல்லி இருந்தேன். பங்குச் சந்தை என்பது ஒரு நீண்டகால முதலீடு; குதிரை ரேஸ் போல சூதாட்டமல்ல என்பதையும் தெளிவாகச் சொல்லி இருந்தேன். இதைப் படித்த வாசகர்கள் பலர் உடனே பங்குச் சந்தையில் குதிக்கத் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஆனால் நினைத்த மாத்திரத்தில் பங்குச் சந்தையில் குதித்துவிட முடியாது. ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு முன்பு ஒரு கணக்கு ஆரம்பிக்கிற மாதிரி பங்குச் சந்தையில் இறங்கு வதற்கு இரண்டு கணக்குகளைத் தொடங்க வேண்டும். டீமேட் அக்கவுன்ட் மற்றும் புரோக்கிங் அக்கவுன்ட் அல்லது டிரேடிங் அக்கவுன்ட் என்ற இரண்டுதான் அவை. பங்குகளை வாங்கி, விற்க இந்த இரண்டு வகையான அக்கவுன்ட்டுகளும் தேவை.

முந்தைய காலங்களில் ஒரு கம்பெனியின் பங்கை நாம் வாங்கினால் அதற்கு அடை யாளமாக சர்ட்டிஃபிகேட் கொடுப்பார்கள். இந்த சர்ட்டிஃபிகேட் கொடுப்பதில் பலவிதமான அசௌகரியங்கள் இருந்தன. அவை காகிதத்தில் அச்சிடப்பட்டவை என்பதால் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிழிந்துவிடும். தொலைந்து போகவும் வாய்ப்புண்டு; தீயில் அழிந்துவிட வாய்ப்புண்டு. இதுபோன்ற பல அபாயங்கள் அதில் இருந்தன.


கணினி புழக்கத்துக்கு வந்தபிறகு இந்த காகித சர்ட்டிஃபி கேட்டை ஒழித்துக் கட்டிவிட்டு, எலெக்ட்ரானிக் முறையில் அதை டிஜிட்டலாக மாற்றிவிட்டார்கள். நீங்கள் வாங்கும் பங்குகளை உங்களுக்கென இருக்கும் அக்கவுன்ட்டில் வைத்திருக்கத் தான் இந்த டீமேட் கணக்கு. நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கைப் போலவோ அல்லது லாக்கர் போலவோ இந்தக் கணக்கை நினைத்துக் கொள்ளலாம். சரி, டிரேடிங் கணக்கு என்றால்..? அதுவும் சிம்பிளான விஷயம்தான். புரோக்கரிடம் நீங்கள் வைத்துள்ள டிரேடிங் கணக்கில் பணம் செலுத்தி பங்கை வாங்கவோ, விற்கவோ செய்வீர்கள். அவ்வாறு நீங்கள் வாங்கிய பங்குகள் உங்களது டீமேட் கணக்கில் வரவாகி விடும். அதேபோல் நீங்கள் பங்குகளை விற்கும் பொழுது உங்கள் டீமேட் கணக்கில் இருந்து விற்ற பங்குகளை கழித்துவிட்டு, அந்தப் பங்குகளை வாங்கியவர் கணக்கிற்கு மாற்றப்படும்.
சரி, இந்த டீமேட் கணக்கு களை யார் பராமரிக்கிறார்கள்? என்.எஸ்.டி.எல். மற்றும் சி.டி.எஸ்.எல். (NSDL & CDSL) என்ற இரு நிறுவனங்கள் தான் இந்தியாவில் உள்ள அனைத்து டீமேட் கணக்குகளையும் வைத்துக் கொண்டு பராமரித்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கும், இந்த இரு நிறுவனங்களுக்கும் இடை யில் டி.பி (DP – Depository Participant) என்பவர் இருப்பார். இந்த டி.பி பெரும்பாலும் உங்களது புரோக்கராகவே இருப்பார். இப்படி நாம் வாங்கும் பங்கு தொலைந்து போக வாய்ப்புண்டா? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை நம் கணக்குக்கு வரவேண்டிய பங்குகள் வேறு ஒரு கணக்குக்கு தவறுதலாகப் போயிருந்தால், அதை எளிதாகக் கண்டுபிடித்து, திரும்பப் பெறமுடியும். எனவே, கவலை வேண்டாம்.


இந்த புரோக்கிங் அக்கவுன்ட்டை யாரெல்லாம் திறக்கலாம்? இந்தியப் பிரஜை (மைனர் உட்பட), கம்பெனிகள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள், டிரஸ்ட்டுகள், இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்.), இந்திய வம்சா வழியினர், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் எஃப்.ஐ.ஐ. என்று கூறப்படும் அந்நிய முதலீட்டாளர்கள் போன்ற அனைவரும் திறக்கலாம். இந்திய வம்சாவழியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்.ஆர்.இ. மற்றும் என்.ஆர்.ஓ. என்ற இரு விதமான கணக்கு களைத் திறக்கலாம்.


சரி, இந்த புரோக்கிங் அக்கவுன்ட்டைத் திறக்க என்னென்ன தேவை?
1. விண்ணப்பம் (இதில் ஐம்ப துக்கும் மேற்பட்ட இடங்களில் நீங்கள் கையெழுத்துப் போட வேண்டும்!)
2. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் + நாமினி புகைப்படம்.
3. பான் கார்டு நகல்.
4. அட்ரஸ் புரூஃப்.
5.வங்கிக் கணக்கு.
6. கணக்கு திறப்பதற்கான கட்டணம்.

மேற்சொன்னவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா? இல்லை என்றால் உடனடியாக அதைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்குங்கள். சரி, இந்த புரோக்கிங் அக்கவுன்ட்டை எந்த நிறுவனத்தில் திறக்கலாம், அல்லது எவ்வாறு புரோக்கிங் நிறுவனத்தைத் தேர்வு செய்வது என்கிற கேள்வி பலருக்கும் வரும்.


புரோக்கிங் நிறுவனத்தில் கணக்கு வைப்பதற்கு முன் அனைவரும் தவறாமல் கேட்கும் கேள்வி, ஒவ்வொரு முறை பங்கு வாங்கும் போதும் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதே! நாம் காசு விஷயத்தில் கறார் என்றாலும், இது கடைசியாக கேட்கப்பட வேண்டிய கேள்வி என்பதே என் கருத்து. புரோக்கரேஜ் கட்டணத்தைவிட, நீங்கள் தேர்வு செய்யப் போகும் புரோக்கர் எவ்வளவு காலமாக தொழிலில் உள்ளார், அவரைப் பற்றியோ அல்லது அவரது புரமோட்டர்களைப் பற்றியோ செபியில் பெரிய வழக்குகள் ஏதேனும் உள்ளதா, அந்த புரோக்கரிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளருக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது, ஆன்லைன்/ஆஃப்லைன் வசதிகள் எவ்வாறு உள்ளது, உங்களுக்கு பர்சனல் அட்வைஸ் தர அல்லது வழி நடத்திச் செல்ல அந்நிறுவனத்தில் ஆட்கள் உள்ளனரா, உங்களுடைய ரிலேஷன்ஷிப் மேனேஜருக்கு என்னென்ன தகுதி இருக்கிறது என்பது போன்ற பல விஷயங்களைத்தான் நீங்கள் முதலில் கேட்டு முடிவெடுக்க வேண்டும்.


இதற்காக புரோக்கரேஜ் கட்டணம் பற்றி தெரிந்து கொள்ளத் தேவையில்லை என்று சொல்லவில்லை. என்.எஸ்.இ. மற்றும் பி.எஸ்.இ-யின் விதிமுறைகளின்படி, வாடிக் கையாளரிடமிருந்து 2.50 சதவிகிதத்துக்கு மேல் புரோக்கரேஜ் வாங்கக்கூடாது. ஆனால், வாடிக்கையாளருக்குக் கொடுக்கும் சேவையைப் பொறுத்து, டெலிவரி புரோக்கரேஜ் ஆக 0.50% முதல் 1% வரை புரோக்கர்கள் கட்டணம் வசூலிக்கிறார்கள். தினசரி வர்த்தகத்திற்கு (அன்றே வாங்கி அன்றே விற்பதற்கு) இன்னும் குறைவாக (0.10% - 0.30%) கட்டணம் வசூலிக்கிறார்கள். சிலர் குறைவான புரோக்கரேஜ் என்கிற ஒரே காரணத்துக்காக புரோக்கர்களை மாற்றுகிறார்கள். ஆனால், அங்கு வேறு சில அசௌகரியங்கள் இருக்கலாம். அது என்ன என்பது காலம் செல்லச் செல்லத்தான் தெரியும்.


அதீத பாதுகாப்பைத் தேடுபவர்கள் டிரேடிங் கணக்கை ஒரு புரோக்கரிடமும், டீமேட் கணக்கை வேறொரு நிறுவனத்திடமும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு செய்வதால் அசௌகரியங்கள் அதிகம்.