Friday, May 4, 2012

டைட்டானிக் கப்பலை உருவாக்க ஆஸ்திரேலிய கோடீசுவரர் திட்டம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான கிளைவ் பாமர் முயற்சிகள் எடுத்துள்ளார்.
இவ்வகையான கப்பலை உருவாக்குமாறு சீன அரசுக்கு சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் தான் கோரியிருப்பதாக ஊடகங்களிடம் கிளைவ் பாமர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலை உருவாக்கும் பணி அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் 2016ஆம் ஆண்டு இக்கப்பல் உருவாக்கப்பட்டு கடல் பயணங்களுக்குத் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.
வடிவமைப்பு, அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இது கூடிய அளவுக்கு சென்ற நூற்றாண்டின் டைட்டானிக் கப்பலை ஒத்ததாகவே உருவாக்கப்படும் ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதே தனது திட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சி.எஸ்.சி. ஜின்லிங் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இக்கப்பலை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தான் கையொப்பமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி மூழ்கிய ஒரு கப்பல். இக்கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நிறைவுதினம்கூட அண்மையில் 15 ஏப்ரல் அன்று வந்திருந்தது.

0 comments:

Post a Comment