Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 8

பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி களிலும் நாம் அடிக்கடி படிக்கும், பார்க்கும் செய்தி, சென்செக்ஸ் ஏறிவிட்டது அல்லது இறங்கிவிட்டது என்பதே. அதெப்படி சென்செக்ஸ் ஏறும் அல்லது இறங்கும்? அதற்கு கால் இருக்கா? என்று சிலர் அப்பிராணியாகக் கேட்கிறார்கள். சிம்பிள். தக்காளி, வெங்காயம் விலை ஏறி, இறங்குகிற மாதிரிதான் இதுவும்! பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலை உயர்ந்தால், மார்க்கெட் உயர்கிறது. குறையும்போது மார்க்கெட்டும் சரிகிறது. இந்த ஏற்ற, இறக்கத்தைச் சுட்டிக் காட்ட ஒவ்வொரு பங்குச் சந்தைகளிலும் சில குறியீடுகள் இருக்கின்றன. பங்குகளின் விலை உயரும்போது குறியீடுகளும் உயர்கின்றன. குறையும்போது இந்தக் குறியீடுகளும் தாழ்கின்றன.
இந்தக் குறியீடுகள் தொடர்ந்து உயரும் பட்சத்தில் சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும், குறையும்பட்சத்தில் சந்தை கரடியின் பிடியில் சிக்கியிருப்பதாகவும் சொல்கிறோம்.


1980-களின் நடுப்பகுதி வரை எந்தக் குறியீடுகளும் இல்லாமல் விலையை மட்டுமே அடிப் படையாக வைத்து இந்தியாவில் பங்கு விற்பனை நடந்து வந்தது. பங்குகளின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த சந்தை மேலே போகிறதா, இல்லை கீழே சாய்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பது கடினமான விஷயமாக பலருக்கும் இருக்க, இதனையே ஒரு குறியீடாக மாற்றினால் என்ன என்கிற கேள்விக்குக் கிடைத்த பதில்தான் குறியீடுகள். இவை விஞ்ஞானப்பூர்வமாகக் கணக் கிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. குறியீடுகளை உண்டு பண்ணி பராமரிப்பதற்கென்றே உலகளவில் பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. உதாரணம், புளூம்பர்க் நிறுவனம்!


இந்தியாவில் மிகவும் பரவலாக அறியப்படும் குறியீடுகள் இரண்டு: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி.

சென்செக்ஸ்: இந்திய பங்குச் சந்தையின் மிகவும் பழமை வாய்ந்த குறியீடு ஆகும். 1986-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பல துறைகளிலும் உள்ள முப்பது பெரிய நிறுவனங்கள் இதில் இடம் பெறுகின்றன. அவ்வப்பொழுது ஏதாவது ஒன்றிரண்டு நிறுவனங்கள் வெளியே செல்வதும் உள்ளே வருவதும் உண்டு. உலகளவில் உள்ள டவ் ஜோன்ஸ், நிக்கி, எஸ் அண்ட் பி 500 போன்ற பெரிய குறீடுகளைப் போல நமது குறியீடுகளும் சந்தையில் விற்பதற்கு ரெடியாக இருக்கும் பங்கு களின் மார்க்கெட் மதிப்பினை, அதாவது விலையை வைத்தே கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கில் புரமோட்டர்கள் மற்றும் அரசாங்கத்திடம் இருக்கும் பங்குகள், மேலும் லாக் செய்யப் பட்ட பங்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.


நிஃப்டி: இது தேசிய பங்குச் சந்தையின் குறியீடு ஆகும். இதில் இந்தியாவில் உள்ள 23 துறைகளிலிருந்து ஐம்பது நிறுவனங்கள் இடம் பெறுகின்றன. இந்தக் குறியீட்டை ஐ.ஐ.எஸ்.எல். என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஐ.ஐ.எஸ்.எல். தேசிய பங்குச் சந்தை மற்றும் கிரிஸில் ஆகிய இரண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.


நிஃப்டியில் உள்ள நிறுவனங்களில் மிக அதிக மதிப்பைப் பெற்றிருப்பது ஐந்து நிறுவனங் கள். கடந்த 18.1.2011-ல் நமக்குக் கிடைத்த தகவல்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்துக்கு தான் முதலிடம். இதற்கு 9.84% மதிப்பு உண்டு. உதாரணமாக, நிஃப்டி 100 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது என்றால் அதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு 9.84% ஆகும். இதே போலத்தான் இறங்கும் போதும். ரிலையன்ஸுக்கு அடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனம் 9.41%, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 6.82%, ஐ.டி.சி.5.46%, எல் அண்ட் டி 5.27%, ஹெச்.டி.எஃப்.சி. 5.01,% ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் 4.40 சதவிகிதமும் பெற்றுள்ளன. மீதமுள்ள சதவிகிதத்தை மற்ற 44 நிறுவனங்கள் பகிர்ந்துள்ளன.. பாரத் பெட்ரோலியம், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிட்டல், சுஸ்லான் நிறுவனங்கள் 0.50 சதவிகிதத்துக்கும் கீழே மதிப்பைப் பெற்றுள்ளன.
சென்செக்ஸில் மொத்தம் முப்பது பங்குகள் உள்ளன. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 11.61%, இன்ஃபோசிஸ்க்கு 11.08%, ஐ.சி.ஐ.சி.ஐ. 8.05%, ஐ.டி.சி. 6.44%, எல் அண்ட் டி 6.22%, ஹெச்.டி.எஃப்.சி. 5.91% மதிப்பும் கொண்டுள்ளன. மீதமுள்ள 24 நிறுவனங்கள் இதற்கும் கீழே மதிப்பைக் கொண்டுள்ளன.


இதுவரை நாம் கண்டது இரண்டு குறியீடுகளில் உள்ள பங்குகளுக்கு இருக்கும் மதிப்புகளைத்தான். இதுபோல் பல குறியீடுகள் இரண்டு சந்தைகளிலும் உள்ளன. மார்க்கெட் மதிப்பு, துறைகள், முதலீட்டு முறைகள், அரசாங்கம் தனியார் போன்ற பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பல குறியீடுகள் நமது இரண்டு சந்தைகளிலும் உள்ளன.


இந்தக் குறியீடுகளை பங்குச் சந்தை அல்லது அதனைச் சார்ந்த அமைப்புகள் கணக்கிடுகின்றன. குறிப்பிட்ட வரையறைக்குள் எந்தப் பங்குகள் ஒவ்வொரு குறியீட்டிலும் இடம் பெற வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்பதை பங்குச் சந்தையினால் உருவாக்கப்பட்ட கமிட்டிகள் நிர்ணயிக்கின்றன. நிறுவனங்கள் பெரிதாக இருந்து, அவற்றின் மார்க்கெட் மதிப்பு அதிகமாக இருந்து, அந்நிறுவனங்களின் பங்குகள் பரவலாக முதலீட்டாளர் களிடம் அதிக சதவிகிதத்தில் இருக்கும் பட்சத்தில், குறியீடுகளில் அப்பங்குகளின் வெயிட்டேஜ் அதிகமாக இருக்கும். நமது குறியீடுகளில் சில பாப்புலரான குறியீடுகளின் பெயர்களையும் அவற்றைப் பற்றிய சிறிய அறிமுகத் தையும் கீழே தந்துள்ளேன்:

தேசியப் பங்குச் சந்தையின் பாப்புலர் குறியீடுகள்:

1. நிஃப்டி - இந்த குறியீடு பற்றி ஏற்கெனவே சொன்னேன். இந்தியாவின் 50 பெரிய நிறுவனப் பங்குகள் அடங்கிய பட்டியல் இவை. 23 துறைகளைச் சார்ந்த பங்குகள் கொண்ட இந்தக் குறியீடு இந்தியப் பொருளாதாரத்தின் முகம் என்றே சொல்லலாம். தேசியப் பங்குச் சந்தையின் 48% வர்த்தகம் இப்பங்குகளில்தான் நடக்கிறது. இந்தக் குறியீட்டை வைத்து பல டெரிவேட்டிவ்கள் மற்றும் ஃபண்டுகள் வர்த்தகமாகின்றன. இந்தக் குறியீட்டில் இடம்பெறும் நிறுவனங்களைத்தான் 'புளூசிப் கம்பெனிகள்’ என்று அழைக்கிறோம்.

2. நிஃப்டி ஜூனியர் - நிஃப்டி பங்குகளுக்குப் பிறகு அதிகமாக வர்த்தகமாகும் 50 பங்கு களை உள்ளடக்கியது. இந்தக் குறியீட்டையும் நிஃப்டியின் 50 பங்குகளையும் சேர்த்தால் இந்தியா வில் வர்த்தகமாகும் டாப் 100 பங்குகளின் லிஸ்ட் கிடைக்கும். இந்த இரண்டு குறியீடுகளிலும் வெவ்வேறு பங்குகள்தான் இடம் பெறும். ஒரே பங்குகள் இரண்டு குறியீடுகளிலும் இடம் பெறாது.

3. நிஃப்டி மிட்கேப் 50 - நடுத்தர மார்க்கெட் மதிப்புள்ள அதிக வளர்ச்சியுள்ள 50 பங்குகள் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.

4. பேங்க் நிஃப்டி - எந்த ஒரு பொருளாதாரமும் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் பொழுது, அப்பொருளாதாரத்தில் உள்ள வங்கிகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இந்தக் குறியீட்டில் 12 பெரிய வங்கிகள் அங்கம் வகிக்கின்றன.

5. சி.என்.எக்ஸ். 500 - இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் 500 நிறுவனங்களின் குறியீடு ஆகும். தேசியப் பங்குச் சந்தையின் 87% வர்த்தகம் இப்பங்குகளில்தான் நடக்கிறது. 72 விதமான தொழில் பங்குகள் இக்குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.

6. சி.என்.எக்ஸ். ஐ.டி - இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி துறையைச் சார்ந்த 20 முன்னணிப் பங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தியா உலகளவில் ஒரு சேவைப் பொருளாதாரமாகக் கருதப்படும் நிலையில் இந்தக் குறியீடு ஒரு முக்கியமான அளவுகோலாக உள்ளது.

7. சி.என்.எக்ஸ். இன்ஃப்ரா - கட்டுமானப் பணிகள், அடிப்படைத் தேவைகள் மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைச் சார்ந்த 25 நிறுவனப் பங்குகளின் குறியீடு.


8. சி.என்.எக்ஸ். ரியால்டி - ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள 10 முன்னணி நிறுவனப் பங்குகள் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.

தேசியப் பங்குச் சந்தையைப் போல பி.எஸ்.இ-யில் உள்ள சில பாப்புலர் குறியீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, 1. சென்செக்ஸ், 2. பி.எஸ்.இ. மிட்கேப், 3. பி.எஸ்.இ. ஸ்மால்கேப், 4. பி.எஸ்.இ. 100, 5. பி.எஸ்.இ. 200, 6. பி.எஸ்.இ. 500, 7. பி.எஸ்.இ. ஆட்டோ, 8. பி.எஸ்.இ. பி.எஸ்.யூ. போன்றவை.

 நன்றி: நாணயம் விகடன்

0 comments:

Post a Comment