Thursday, May 24, 2012

இந்திய வல்லரசின் விமான வியூகங்கள்



இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுத கொள்முதல் செய்த நாடு நம் இந்தியாதான்!!!

இந்திய ராணுவத்தில்  கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப்படைப்பிரிவைச்  சொல்லலாம்(இப்படி எனது நாட்டின் ராணுவத்தைப் பற்றிச் சொல்லவே  ஆன்மீகக்கடல் வெட்கப்படுகிறது;வேதனைப்படுகிறது)அடிக்கடி கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் மிக் ரக விமானங்களுக்குப் பதிலாக சுகோய் 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் செய்தது இந்தியா.ஆனாலும் சுகோய்-30,மிராஜ்-2000,ஜாக்குவார்,தேஜஸ் போன்ற இந்தியப் படைப்பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர்விமானங்களோடு ஒப்பிடும்போது,கொஞ்சம் சுள்ளான்கள் தான்.மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் ‘ஜெனரேஷன் கேப்’ உண்டு.

மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல்,பனிமலை,நிலம் என அனைத்துப் பிரதேசங்களிலும் தாக்குப்பிடித்து போர் புரிய முடியாது.அனைத்துப் பிரதேசங்களிலும் நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும் நான்காம் தலைமுறை போர்விமானங்களை வாங்க இந்தியா ரூ.50,000 கோடிகளை ஒதுக்கீடு செய்து,126 விமானங்களை வாங்க டெண்டர் விட்ட போது,பல ஆயுத நிறுவனங்கள் அதற்கு அடித்துக்கொண்டன.

நான்காம் தலைமுறைப் போர் விமானங்களில் பெஸ்ட் ரஃபேலும்,யூரோஃபைட்டரும்தான். இரண்டுமே வான்,நிலம் ,கடல் மூன்றிலும் தாக்குதல் நடத்தக்கூடியவை.ரஃபேல் பிரான்ஸின் தயாரிப்பு.யூரோஃபைட்டர் ஜெர்மனி,இத்தாலி,ஸ்பெயின்,இங்கிலாந்து,ஆஸ்திரியா,சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு.
யூரோஃபைட்டரை விட ரஃபேலின் விலை குறைவு.அதுவும் போக,இந்திய விமானப் படையில் இருக்கும் மிராஜ்-2000 ரஃபேலின் முந்தைய வெர்ஷன்! அதனால் ரஃபேலை இயக்க இந்திய போர்விமானிகள் சிரமப்பட மாட்டார்கள்.இதனால்,ரஃபேலின் பக்கம் பார்வையை திருப்பியது இந்திய விமானப்படை.

அவ்வளவுதான். . . இங்கிலாந்து,இத்தாலி ஆகியவை முட்டி முறைக்க ஆரம்பித்தன. ‘இந்தியா தன் முடிவை மறுபரிசீலினை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று அழுத்தமாகவே சொன்னார் இங்கிலாந்து பிரதமர். ‘இந்தியா வளர்ந்த நாடு ஆகிவிட்டது.அதன் சேரிப்பகுதி முன்னேற்றத்துக்காக என்.ஜி.ஓ.க்களுக்கு அளிக்கும் தொகையை இங்கிலாந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்!’என்று ஐரோப்பிய பத்திரிகைகள் கருத்துச் சொல்ல ஆரம்பித்தன.ஆனாலும்,ரஃபேலை வாங்குவதில் உறுதியாக இருக்கிறது இந்தியா.

முதலில் 18 விமானங்களை நேரடியாக அளிக்க வேண்டும்.பிறகு மீதி 108 விமானங்களை இந்திய நிறுவனங்களோடு இணைந்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தயாரித்துக்கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தது.அதாவது ரஃபேல் விமானங்களைச் சொந்தமாக உருவாக்கிக்கொள்ள இந்தியாவுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

அட,நல்லா இருக்கே என்று தோன்றுகிறதா? உண்மையில் இப்போது இருப்பதை விட 10 ஆண்டுகள் கழித்து இந்திய விமானப்படை பலமாகத்தான் இருக்கும்.ஆனால்,நமது பங்காளி சீனா பலவானாக இருக்கும்.பெங்களூரில் போர் விமானம் தயாரிக்கும் பாரத் ஏரோநாட்டிகல் லிமிடெட்டை விட,சீனாவின் போர்ப்படைப் பிரிவான செங்க்டு பல படிகள் முன்னணியில் நிற்கிறது.

அங்கே ஜே-20 என்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை 2011 ஜனவரி மாதமே உருவாக்கிவிட்டார்கள்.தற்போது அமெரிக்கா,ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக செயல்திறன் மிக்க விமானத்தை உருவாக்கும் தகுதி படைத்த மூன்றாவது நாடாகிவிட்டது சீனா.2017க்குள் சீன ராணுவத்தில் ஐந்தாம் தலைமுறை ஜே-20 இருக்கும்.10 வருடங்கள் கழித்து,இந்தியாவில் நான்காம் தலைமுறை ரஃபேல் விமானங்கள் இருக்கும்.

இப்போது இந்திய ராணுவத்தில் உள்ள சுகோய்,மிராஜ் விமானங்களைச் சமாளிக்க 2005லேயே ஜே-10 விமானங்களை வடிவமைத்துவிட்டது சீனா.அப்போது அவர்களிடமிருந்து 36 ஜே-10 விமானங்களை வாங்க சீனாவோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது பாகிஸ்தான்.இந்தியா ஏன் ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்கவில்லை?


2000 ஆண்டுவாக்கிலேயே ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வாங்க பட்ஜெட் ஒதுக்கியும்,அப்போது எதுவும் விலைக்குக்கிடைக்க வில்லை;வல்லரசு நாடுகள் தங்களுக்குத் தேவையான அளவு தயாரித்து வைத்துக்கொண்டு பின்னர்தான்,விற்பனைக்காக விமானத்தை மார்க்கெட்டுக்கு அனுப்பும்.அது விற்று முடிவதற்குள் அடுத்த தலைமுறை விமானம் தயாராகிவிடும். இந்தியா ஐந்தாம் தலைமுறை விமானத்துக்காக காத்திருக்க,சீனா பட்ஜெட்டில் எக்கச்சக்க பணம் ஒதுக்கி சொந்தமாக ஐந்தாம் தலைமுறை விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது.

சமீபத்தில்,நமது பிரதமர் மன்மோகன்சிங் வருத்தத்தோடு சொன்னது: பாதுகாப்புத்துறையில் சீனாவை  விட,இந்தியா பின் தங்கியே இருக்கிறது.(ஐயா சிங்கு,நாம் பின் தங்குதறதுக்கு யாரோ காரணம்ங்கற மாதிரி ஃபீல் பண்ணுறீங்க,நீங்க செய்ய வேண்டிய கடமைய்யா இது??!!)

இப்போதைக்கு போர் வராததுதான்.போர் வராத வரை பிரச்னை இல்லைதான்.யாருக்கு என்கிறீர்களா? யாருக்கோ!
நன்றி:ஆனந்த விகடன்,பக்கம் 44,45;வெளியீடு 28.3.12

0 comments:

Post a Comment